
National Pollution Control Day இன்று அனுசரிக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு கொடூரமான போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு போபாலில் உள்ள யூனியன் கார்பைட் ரசாயன ஆலையில் இருந்து மீதைல் ஐசோசைனேட் (Methyl Isocyanate) மற்றும் வேறு சில விஷ வாயுக்கள் கசிந்ததால் உலகமே சோகத்தில் ஆழும் விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.
இந்த கசிவு தொடர்பாக பல்வேறு வாதங்களும், விவாதங்களும் முன் வைக்கப்பட்டாலும், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் விஷ வாயுவை சுவாசித்தனர். இதன் தாக்கத்தில், தொடர்ந்த சில நாட்களில் குறைந்தது 4,000 பேர் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 4000 என்றாலும் பக்க விளைவுகள் பயங்கரமாக இருந்தன.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி என்றும் இந்தியாவின் மாறாவடுவாக தங்கிவிட்ட துயர தினமான டிசம்பர் 2 தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. போபால் வாயுக் கசிவு, தொழிற்சாலை மாசுப் பேரிடர்களில் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிப்பதன் நோக்கங்கள்:
• தொழிற்சாலைப் பேரிடர்களை மேலாண்மை செய்து கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது
• தொழிற்சாலை முறைமைகள் அல்லது மனித அலட்சியத்தால் மாசு உருவாவதைத் தடுத்தல்
• மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஏற்படுத்துவது…
CPCB -யின் செயல்பாடுகள்
• நீர் மாசைத் தடுத்தும் கட்டுப்படுத்தியும் தணித்தும் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கிணறுகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.
• நாட்டில் காற்று மாசைத் தடுத்தும், கட்டுப்படுத்தியும், மட்டுப்படுத்தியும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!